வழக்கு இருப்பதால் பதவி விலக வேண்டும்; மதுரை ஆதீனத்தின் மீது கலெக்டரிடம் தம்பிரான் புகார்: அறநிலையத்துறை தலையிட வலியுறுத்தல்
மதுரை: வழக்கு உள்ளதால் மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இவ்விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டுமென தம்பிரான், கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டின் மிகப்பழமையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக உள்ள ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இவர், தன் மீது கொலை முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் முன்ஜாமீன் ெபற்றுள்ளார்.
இவருக்கு முன்பாக இருந்த மதுரை ஆதீனத்திடம் இளைய தம்பிரானாக இருந்தவர் விஸ்வலிங்க தம்பிரான். இவர் தற்போதைய ஆதீனத்தைக் கண்டித்து, மறைந்த 292வது ஆதீனமான அருணகிரிநாதர் சமாதி முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து மதுரை தெப்பக்குளம் போலீசார், தம்பிரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர். இந்த பரபரப்பான சூழலில், தன்னை மதுரை ஆதீனமாக நியமிக்க வேண்டும் என கூறி விஸ்வலிங்க தம்பிரான், நேற்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது, ‘‘மதுரை ஆதீனம் குழந்தை போல பேசுவார். திடீரென கோபப்படுவார். யார் பேசினாலும் சதி இருக்குமோ என கேள்வி கேட்பார். அவர் மீது வழக்கு உள்ளதால், அவராக மதுரை ஆதீனத்தில் இருந்து விலக வேண்டும். மதுரை ஆதீனம் நியமனத்தில் அறநிலையத்துறை தலையிட வேண்டும். 292வது ஆதீனத்திடம் கடந்த 2018 ஜூலை மாதம் முதல் 292 வது ஆதினமான குருமகா சன்னிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று தம்பிரான் சாமியாக சேவை செய்தேன். கடந்த 2021ல் அவர் இறந்த பிறகு, தற்போதுள்ள 293வது ஆதீனத்திடம் தம்பிரான் சாமியாக தொடர்ந்து பணியாற்றினேன். 292வது ஆதீனத்தின் விருப்பப்படி, நான் அடுத்த வாரிசாக வரவேண்டும் எனக் கோரி தர்ணாவில் ஈடுபட்டேன்’’ என்றார்.