மதுரை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: 20 வீடுகளின் மேற்கூரை சேதம்: ரூ.பல லட்சம் வாழைகள் நாசம்: விவசாயிகள் கவலை
திருப்பரங்குன்றம்: மதுரையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகமலை புதுக்கோட்டையில் வீசிய சூறைக்காற்றுக்கு 20 வீடுகளின் மேற்கூரை மற்றும் ரூ.பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் கடந்த சில தினங்களாக அக்னிநட்சத்திரம் பல வெயில் கொளுத்தி வருகிறது.
இரவிலும் புழுக்கமாக உள்ளது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிமாக இருந்தது. இந்நிலையில், மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் முக்கால் மணிநேரம் பெய்த மழையால் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், வண்டியூர் உள்ளிட்ட பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை துணைமின்நிலையம் உள்ளிட்ட வனத்தை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது நாகமலை வனப்பகுதியை ஒட்டிய மாரிமுத்து நகர் பகுதியில் வீடுகளில் உள்ள ஓடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் சூரைக்காற்றால் பல அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டது.
இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதமடைந்தன. மேலும் இதே பகுதியில் நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள வயல்களில் வாழை, நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதில், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த வாழை மரங்கள் சூறைக்காற்றல் சேதமடைந்தது இதில், பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.