சென்னை: கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை ஆதீனம் காரில் வந்தபோது உளுந்தூர்பேட்டை-சேலம் ரவுண்டானா பகுதியில் அவரது கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம். காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் என்று கூறியிருந்தார்.
இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி, ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அவருக்கு முன்ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நிபந்தனைகள் இன்று தெரியவரும்.