மதுரையில் 60% வாக்காளர்களை நீக்க முயற்சியா? எஸ்ஐஆர் பணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பாஜ குளிர் காய்கிறது: மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம்
மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி எம்பி சு.வெங்கடேசன் நேற்று அளித்த பேட்டி: எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எவ்வளவு குளறுபடியாக நடத்த வேண்டுமோ, அவ்வளவு குளறுபடியாக இந்திய தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 2002, 2005 வாக்காளர் பட்டியலில் 40 சதவீத வாக்காளர்களே இருக்கின்றனர். 60 சதவீத வாக்காளர்கள் 2005க்கு பிறகு உள்ளவர்கள். பெரும்பான்மையான வாக்காளர்களை நிர்க்கதியில் நிறுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இந்த 60 சதவீத வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படுமா? எப்படி சேரக்கப்படும்? அதற்கு முறையான சான்று, விதிகள் என்ன என்பதை வாக்குச்சாவடி முகவர் துவங்கி யாருக்கும் தெளிவை உருவாக்கவில்லை. மொத்த சமூகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட வேலையை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களுக்கு, அரசியல் கட்சி பாக பொறுப்பாளருக்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது கோபம் வரச் செய்து, களத்தில் ஒரு குழப்பத்தை உருவாக்கி, அதில் பாஜ குளிர் காய்கிறது. இது மிகப்பெரிய மோசடிக்குத்தான் வழிவகுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
* ‘திண்டுக்கல் சீனிவாசன் சொல்றது உண்மையே’
‘‘பீகாரில் பாஜக வெற்றி பெற எஸ்ஐஆர் பணிகளே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளாரே?’’ எனக் கேட்டதற்கு, ‘‘ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பதற்கு பல நூறு உதாரணங்களில், ஒரு உதாரணம்தான் இன்றைக்கு பீகார் தேர்தல். அந்த உதாரணத்தை திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி இருப்பது மக்களுக்கு இந்த உண்மையை மேலும் விளங்கச் செய்கிறது’’ என்று சு.வெங்கடேசன் தெரிவித்தார்.


