மாதவரம்: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் சிஎம்டிஏ லாரி நிறுத்த மையம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு பின்னர் செல்கின்றன. ஏராளமான புக்கிங் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த லாரி நிறுத்த மையம் சுமார் ரூ.40 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய், மின்விளக்கு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் பழைய மழைநீர் கால்வாயில் மீது மின்சார பில்லர் இருப்பதால் புதிய மழைநீர் கால்வாய் அமைக்க முடியாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,மாதவரம் மின்சார வாரியத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக கால்வாயில் தண்ணீர் தேங்கி போக முடியாமல் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் லாரிகள் சென்றுவருவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் மீது மின்சார பில்லரை இடமாற்றம் செய்துவிட்டு மழைநீர் கால்வாய் பணியை மீண்டும் தொடரவேண்டும், சாலையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.