Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருமணம் செய்து மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக புகார்: ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணிநேரம் விசாரணை

* துணை கமிஷனர் வனிதா விசாரித்தார்

* கருக்கலைப்புக்கான ஆதாரங்கள் குறித்து சரமாரி கேள்வி

* திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது என தகவல்

சென்னை: தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் மீது நேற்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை கமிஷனர் வனிதா 6 மணி நேரம் விசாரணை நடத்தினார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 29ம் தேதி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனது தாயுடன் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், மாதம்பட்டி ரங்கராஜை நான் பல சந்தர்ப்பங்களில் சந்தித்தேன்.

முதல் மனைவி சுருதியிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும், என்னை புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணையாக என்னை அவர் விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். உடனடியாக எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் கூறினார், 2023 டிசம்பர் 24 ம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில், நாங்கள் இருவரும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.

2024ல், நான் கர்ப்பமானேன், மாதம்பட்டி ரங்கராஜ் என்னை மிரட்டி கருக்கலைப்பு செய்தார். பின்னர் மீண்டும் டிசம்பர் 2024 ல், நான் கர்ப்பமானேன். மறுபடியும் அவர் குழந்தையை கருக்கலைப்பு செய்ய என்னை கட்டாயப்படுத்தி கலைத்தார். பிறகு மீண்டும் கடந்த ஏப்ரல் 2025ல், மீண்டும் கர்ப்பமானேன். இந்த முறையும் அவர் என்னை கருக்கலைப்பு செய்யச் சொன்னார், நான் மறுத்துவிட்டேன்.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் என்னை அடித்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளது. அதை நான் வெளியிட விரும்பவில்லை. எனவே, என்னை திட்டமிட்டு திருமணம் செய்து ஏமாற்றி குழந்தை கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை (நேற்று) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா நேற்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

அவரிடம் துணை கமிஷனர் வனிதா, ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள், திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள், ஆடை வடிவமைப்பு செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் கட்டாயப்படுத்தினாரா, 2 ஆண்டுகளிலேயே மன முறிவுக்கு என்ன காரணம், ஒவ்வொரு நாளும் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் ஜோடியாக வீடியோ மற்றும் புகைப்படம் பதிவு இன்ஸ்டா பக்கத்தில் போடுகிறீர்கள் அது உண்மையா உட்பட 50க்கும் மேற்பட்ட கேள்வி பட்டியலை வைத்து துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

அதைதொடர்ந்து விசாரணையின் போது ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் உடன் ஒன்றாக இருந்ததற்கான ஆவணங்களான வீடியோ மற்றும் புகைப்படங்களை விசாரணை அதிகாரியான துணை கமிஷனர் வனிதாவிடம் அளித்தார். அடுத்த கட்டமாக நடிகரும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பி ஓரிரு நாளில் விசாரணை நடத்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.