Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு மருத்துவர் உள்பட 6 பேரிடம் விசாரணை: மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி சாட்சியம்

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மதுரை சிபிஐ அலுவலகத்தில் கோயில் ஊழியர் பிரவீண்குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத்குமார், தம்பி நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார் ஆகிய 4 பேர், ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்த சக்தீஸ்வரன், கோயில் டைப்பிஸ்ட் பிரபு ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருப்புவனம் சென்ற சிபிஐ, கைதான போலீஸ்காரர் ஆனந்தின் வீட்டில் விசாரணை நடத்தினர். அஜித்குமாரை அழைத்துச் சென்ற சிவகங்கை தனியார் மருத்துவமனையிலும் ஆய்வு செய்து விசாரித்தனர்.

விசாரணையின் 10ம் நாளான நேற்று, மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில், அஜித்குமாரை தனிப்படை போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி கொண்டு சென்ற திருப்புவனம் அரசு மருத்துவமனையின் டாக்டர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, உதவியாளர் அழகர், கோயில் பணியாளர்கள் கண்ணன் மற்றும் கார்த்திக் ஆகியோர் காலை 10.30 மணிக்கு ஆஜராகினர்.

அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மடப்புரம் காளியம்மன் கோயில் கண்காணிப்பாளர் பாஸ்கர், மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணியளவில் வந்தார். அவர் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

* சிசிடிவி காட்சிகள் ஆய்வு

சிபிஐ இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான 3 பேர், நேற்று பகல் 12 மணிக்கு திருப்புவனம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். இங்கு மொத்தம் 8 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஜூன் 27ம் தேதி புகார் கொடுக்க நிகிதா வந்த நேரத்தில் இருந்து ஜூன் 28ம் தேதி இரவு 9 மணி வரை உள்ள பதிவுகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு மாலை 6.45 மணி வரை நடந்தது. இதேபோல், சிவகங்கை தனியார் மருத்துவமனையை சேர்ந்த 2 ஊழியர்கள், அஜித்குமார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நாளில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.