சென்னை: “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில், தங்களது பெற்றோரை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் வகையில் அவர்களின் பள்ளிப்படிப்பு வரை இடை நிற்றலின்றி அவர்கள் கல்வியைத்தொடர, 18 வயது வரை மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிப்படிப்பு மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதன்படி இத்திட்டதின்படி கீழ், ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்/ பெற்றோர் இருவரால் கைவிடப்பட்டவர்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து/பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவராக இருந்தால், பெற்றோரில் ஒருவர் இறந்து பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவர் இறந்து/பெற்றோர் ஒருவரால் கைவிடப்பட்டு, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்,
தகுதியுடைய குழந்தைகளின் உறவினர்கள் குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் நகல், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், குழந்தையின் வாங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல், ஆகியவற்றுடன், அவரவர் பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்- சென்னை தெற்கு, எண்:1, புது தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி வணிக வளாகம், முதல் தளம் (RTO – அலுவலகம் எதிரில்), ஆலந்தூர், சென்னை – 600016, என்பவரிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.