மதுகேட்டு தொல்லை கொடுத்த லாரி டிரைவர் அடித்து கொலை; உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு: எஸ்பி நேரில் விசாரணை
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநந்தம் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் சுரேஷ் (37), டிரைவர். இவர் மீது பலாத்காரம், கொலை முயற்சி, தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக பல முறை சிறை சென்று திரும்பியுள்ளார். சுரேஷ் மதுபோதைக்கு அடிமையானர்.
இன்று காலை கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சந்து கடையில் மதுவிற்பனை செய்யப்பட்டு வந்தது சுரேசிற்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர் இலவசமாக மது கேட்டுள்ளார். அதற்கு கடை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததும், அவர்களிடம் சுரேஷ் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் கோபம் அடைந்த கடை ஊழியர்கள் சுரேஷை சரமாரியாக தாக்கி, ஊருக்கு வெளியே இருந்த குளத்துகரையில் வீசினர். இதில் உயிருக்காக போராடி கொண்டிருந்த சுரேஷ் உயிரிழந்தார்.
இதை அறிந்த சந்துக்கடை ஊழியர்கள் சுரேஷ் உடலை மீட்டு கயிற்று கட்டிலில் போட்டு தீ வைத்து எரிக்க முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் விஏஓ கமல்ஹாசனுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர் சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரித்தார். பின்னர் மருவத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.