Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாரி- லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதல்

*2 பேர் படுகாயம்

செங்கம் : செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று காலை லாரி சென்றது. முறையாறு அருகே திருவண்ணாமலை-பெங்களூர் சாலையில் சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து டிஜிட்டல் பேனர்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில், லோடு ஆட்டோ நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் மற்றும் தர்மா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள், இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களுடன் சேர்ந்து 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய லாரியின் டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர தேடி வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையாக மாற்ற மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை-பெங்களூரு நெடுஞ்சாலையில், குறிப்பாக செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை குறுகிய இருவழிச்சாலையாக இருப்பதுதான் காரணம் எனக்கூறப்படுகிறது. எனவே இந்த இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.