சமக்ர சிக்ஷா அபியான் என்பது பாலர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரையிலான முழு வரம்பையும் உள்ளடக்கிய, பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். இந்த திட்டம் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டது. நிலையான, தரமான கல்வி வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் தனது நிதி பங்களிப்பை இந்த திட்டத்திற்கு வழங்குகிறது.
ஆனால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், கடந்தாண்டு (2024) ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்திற்கான பங்களிப்பு தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்தவகையில் ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு, இதுவரை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை 2020 மற்றும் பி.எம். திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே இந்த தொகை விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர்கள், பலமுறை அதிகார தொனியில் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய கல்விக்கொள்கையின் அபத்தங்களை தெளிவாக பட்டியலிட்டு அதை ஏற்பதில் உள்ள அவலங்களை தெளிவாக முன்வைத்தார்.
அதேநேரத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதி பங்களிப்பை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு எந்தவகையிலும் ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து நிதி மறுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. ‘‘சமக்ர சிக்ஷா நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழ்நாட்டில் 43.94 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 இதர பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த தொகையை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.2,291 கோடியாக தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். இதற்கு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மனுவை சமர்ப்பித்தது. இந்த மனு நீதியரசர்கள் தலைமையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒன்றிய அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை முன்வைத்து வாதாடினர்.
குறிப்பாக சில ஆண்டுகளாகவே கல்வி நிதியை ஒன்றிய அரசு தராமல் பாரபட்சமாக செயல்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர். மேலும் கல்வி நிதியை விடுவிக்க இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக உச்சநீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ‘ஒன்றிய அரசு மூன்று வாரத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
ஒரு திட்டத்தின் கீழ், நிதிபெறுவதற்கான மாநிலத்தின் உரிமையை ஒன்றிய அரசு தடுத்து வைக்கிறது. இதன் மூலம் கூட்டுறவு கூட்டாட்சி என்ற கொள்கையை புறக்கணிக்கிறது. அதிலும் கல்வி நிதியை நிறுத்துவது என்பது கல்வி தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு சமமானது என்று ஏற்கனவே சமூக மேம்பாட்டு அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன. இதை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, ஒன்றிய அரசின் செவிக்கு எட்டுமா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


