சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை (அக்.20) வருகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதுபான கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பண்டிகைக்கால தேவையை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தவரை 4,829 மதுபான கடைகள் முறைப்படி உரிமங்களுடன் இயங்கி வருகின்றன. அதன்படி, தினசரி விற்பனையில் இருந்து பண்டிகை நாட்களில் சற்று கணிசமாக விற்பனை என்பது செய்யப்படும்.
அந்தவகையில் இந்தாண்டு வார இறுதி விடுமுறை தினங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை தொடர்ந்து வருவதால் மதுபானங்களை கையிருப்பில் வைக்கவும், சுற்றுலா இடங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் இருப்பு வைக்க வும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக விற்பனையாகும் மதுபான வகைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.