Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்: திமுகவினரை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்துகிறார், காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று காஞ்சிபுரத்திலிருந்து பயணத்தை தொடர்ந்தார்.  தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கும் பரப்புரையை தொடங்கினர். அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக முன்னோடிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். மக்களை நேரில் சந்திக்கும் திமுகவினர், திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கினர். இதுவரை திமுக நிர்ணயித்த இலக்கை விட, அதாவது 2.5 கோடி இலக்கை தாண்டி உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன்பிறப்பே வா” என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி முதல் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். சந்திப்பின் போது தொகுதி கள நிலவரம், வெற்றி வாய்ப்பு நிலவரம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார். திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்.

அரசிடம் வேறு என்ன மாதிரியான நல உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார். மேலும், கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். தன்னை சந்திக்கும் நிர்வாகிகளுக்கு முதல்வர் புத்தங்களை பரிசாக வழங்கி கவுரவித்து வருகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று திமுகவினரை சந்தித்து ஊக்கப்படுத்த உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட திமுக தொண்டர்களை கவுரவிக்கிறார். தன்னார்வலர்களோடு கலந்துரையாட உள்ளார் என்று திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரறிஞர் அண்ணாவின் வழியில் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் இல்லத்தில் அவரை வணங்கி 2026க்கான தனது தேர்தல் பயணத்தை நேற்று தொடங்கினார் துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். மாநில அளவில் திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மாவட்டம்தோறும் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். அப்போது திமுகவின் அனைத்து மாவட்டத்தின் நிலையிலுள்ள நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இக்கூட்டங்களில் நிர்வாகிகளுக்கு திமுகவின் பாரம்பரிய அடையாளமான கருப்பு சிவப்பு துண்டு அணிவிக்கப்படும். அனைவரின் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும் என்கிற ஜனநாயகப்பூர்வமான நோக்கத்தில் கருத்துப் பெட்டிகள் வைக்கப்பட்டு படிவங்களும் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் நிர்வாகிகள் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை விரிவாகப் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த படிவங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாமாகவே படித்து, அதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் சிறப்பாக செயல்பட்ட முதல் 10 நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து அவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கருத்துப் பெட்டியில் இருந்து சில படிவங்களை தேர்ந்தெடுத்து அவை குறித்து நிர்வாகிகளுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அண்ணாவின் முதன்மை கொள்கையான மாநிலத்தில் சுயாட்சி முழக்கத்தை முன்வைத்து ஒன்றிய அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் தமிழ்நாடு முதல்வரின் கரங்களை வலுப்படுத்த உழைக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது வலியுறுத்தினார்.