நார்தாம்ப்டன்: ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நடப்பு இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல்4 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்த நிலையில் நேற்று தென்ஆப்ரிக்காவுடன் மோதியது. நார்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா 20ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 206ரன் குவித்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் நாட் அவுட்டாக 30 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 61ரன் விளாசினார். ஜேஜே ஸ்மட்ஸ் 30, ஜாக் ருடால்ப் 24, ஆம்லா 22ரன் அடித்தனர். இந்திய பவுலிங்கில் யூசுப் பதான், சாவ்லா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஸ்டுவர்ட் பின்னி 37, சுரேஷ் ரெய்னா 16, வினய்குமார் 13 , இர்பான் பதான் 10 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 18.2 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென்ஆப்ரிக்கா 88ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக வரும் 26ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோத உள்ளன. இன்று மாலை 5.30 மணிக்கு ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன.