சென்னை: கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில், தலைமை செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளதாக கூறி மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, வழக்கில் மனுதாரர் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று வாதிட்டு, அதுதொடர்பாக மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மனுவுக்கு அறப்போர் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.