Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்; பாசன கால்வாய் வசதி இல்லாததால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்: ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கால்வாய் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி: பருவமழைக்கு திருத்தணி பகுதியில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் பாசன கால்வாய்கள் வசதி இல்லாததால், மழைநீர் வீணாகி, விளைநிலங்கள் நீரில் மூழ்குவதால், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று சிறப்பு பெற்ற திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது. ஆறு, ஏரி நீரை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

நீர்நிலைகளில் மழைநீர் தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பயிர் சாகுபடி மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், திருத்தணி கோட்டத்தில் நீர்பாசனத்துறைக்கு சொந்தமான 79 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் இதுவரை 36 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், ஆர்.கே.பேட்டையில் 20, திருத்தணியில் 12, பள்ளிப்பட்டில் 8 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிகள் நிரம்பினாலும், உபரி நீர் பாசன வசதிக்கான பாசன கால்வாய்கள் அடைக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டதாலும் பெரும்பாலான பகுதிகளில் ஏரி உபரி நீர் வீணாகி விளை நிலங்களை மூழ்கடித்து வருவதால், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. ஏரி பாசனத்தை கொண்டு ஏராளமான விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். முப்போகம் விளைவிக்கும் பகுதிகளில் தண்ணீர் பாசனத்திற்கு தேவையான நீர் இருப்பில் இருந்தும் அதனை உரிய முறையில் பயன்படுத்த பாசன கால்வாய்கள் இல்லை. குறிப்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாசன கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஏரி நீர் கடைக்கோடி விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால், பெரும்பாலான ஏரிகளில் உள்ள தண்ணீர் நீர்பாசன பகுதிகளில் உள்ள விளை நிலங்களை மூழ்கடித்து பயிர்களை நாசம் செய்கிறது. எனவே, ஏரிநீர் வீணாவதை தடுக்கும் வகையில் பாசன கால்வாய் அமைக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுக்கின்றனர்.