தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.3000 மாத ஓய்வூதியம் தர வேண்டும்: பொன்குமார் தலைமையில் நடந்த மாநாட்டில் தீர்மானம்
சென்னை: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மண்டல மாநாடு நேற்று நடந்தது. விழாவிற்கு மண்டல தலைவர் ஜி.முகமது ரபீக் தலைமை தாங்கினார். பொருளாளர் பி.கே.ஆறுமுகம் வரவேற்றார். மாநாட்டு கொடியை பொதுச்செயலாளர் குருநாகலிங்கம் ஏற்றி வைத்தார். மாநாட்டு அரங்கை துணை தலைவர் இராம.வெங்கடேசன் திறந்து வைத்தார்.
மாநாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் உரையாற்றினார். மாநாட்டில், “கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுப் பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கும் திட்டம் போன்ற புதிய திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியதற்கு முதல்வருக்கு நன்றி. நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.