குன்னூரில் அதிக ஊக்க மருந்து எடுத்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் : உடற்பயிற்சி கூட உரிமையாளர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு
நீலகிரி : குன்னூரில் அதிக ஊக்க மருந்து எடுத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியது போலீஸ். தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். குன்னூரில் உடற்பயிற்சி நிலையத்தில் ஊக்க மருந்து எடுத்ததால் ராஜேஷ் கண்ணாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் தீ வைத்து கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், ராஜேஷ் கண்ணாவின் பெற்றோர் தனது மகன் உயிரிழப்புக்கு காரணமான உடற்பயிற்சி கூட உரிமையாளரான சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணாவின் தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவான தனியார் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாருக்கு தனிப்படை போலீஸ் வலை வீசி வருகிறது.