கும்பகோணம் கலைஞர் பல்கலை. விவகாரம் ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு: தமிழ்நாடு அரசு தாக்கல்
சென்னை: கும்பகோணத்தில், கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான சட்ட மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக, தமிழ்நாடு முதல்வர் இருப்பார் என்றும், இணை வேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார் என்றும், தேடுதல் குழு வாயிலாக, துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவார்.
அதேபோல, வேந்தரின் அனுமதியின்றி கவுரவ பட்டங்களை வழங்க முடியாது எனவும் பல்கலைக்கழகத்துக்கு மத்திய, மாநில அரசுகள் வாயிலாகவும், பல்கலைக்கழக மானியக்குழு வாயிலாகவும் நிதி வழங்கப்படும். கட்டணம், மானியம், நன்கொடை, பரிசுகள் வாயிலாக, நிதி ஆதாரங்களை பெறலாம் எனவும் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்பி வைத்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில், \\”கும்பகோணத்தில் உள்ள கலைஞர் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா விவகாரத்தில் மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை என்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.