Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள் பொது இடங்களில் புகை பிடிக்க தடை: பீடி, சிகரெட் வகைகளை போலீஸ் எடுத்து சென்றதால் வியாபாரிகள் கவலை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பஸ் நிலையங்களில் சிகரெட்டுகள் விற்பனை செய்யும், புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைகளில் இருந்த சிகரெட், பீடி வகைகளை போலீசார் எடுத்து சென்று விட்டனர். குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் இரவு நேர டீ கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இரவு 11 மணிக்கு பின், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகங்கள் தவிர ஏனைய பிற இடங்களில் அனைத்து டீ கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. குமரி மாவட்டம் சுற்றுலா தலமாக இருப்பதால், இரவு நேர டீ கடைகள், ஓட்டல்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று, தற்போது தற்காலிகமாக இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலமாக இருப்பதால் இரவு நேர டீ கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக பஸ் நிலையங்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடந்தது. தற்போது பஸ் நிலையத்தில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நோட்டீஸ்கள் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையங்களில் உள்ள டீ கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு காரணமாக சிகரெட், பீடி வகைகள் விற்பனை செய்யவும் கூடாது என போலீசார் தெரிவித்து, கடைகளில் இருந்த பீடி, சிகரெட் வகைகளை அள்ளி சென்றுள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டம் உள்ளது. அதே நேரத்தில் பீடி. சிகரெட் விற்பனைக்கு தடை இல்லை. ஆனால் காவல்துறையினர் அவற்றையும் அள்ளி சென்றது ஏன்? என்று வியாபாரிகள், டீ கடைகாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பஸ் நிலையத்தில் புகை பிடிக்க தடை உள்ளதால், அதை வாங்கி சென்று பிற இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். விற்பனை இல்லாததால், வியாபாரம் முடங்கி உள்ளதாகவும் கூறினர்.