Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குலசை முத்தாரம்மன் கோயிலில் 23ம் தேதி தசரா திருவிழா துவக்கம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 23ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்.2ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 22ம் தேதி காலை 11 மணிக்கு காளி பூஜை, மாலை 4 மணிக்கு மகுடஇசை, 5 மணிக்கு சகஸ்ரநாமம், அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மாலை 5.30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7 மணிக்கு வில்லிசை நடக்கிறது. மறுநாள் அதிகாலை கொடிப்பட்டம் ஊர்வலம், காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கங்கள், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் திருக்கோயில் பூசாரியிடம் திருக்காப்பு அணிந்து நேர்த்தி கடன்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை பிரிக்க துவங்குவர். 1ம் திருவிழா அன்று அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனம் - துர்க்கை திருக்கோலம், 24ம்தேதி கற்பக விருட்சம் வாகனம் - விசுவகர்மேசுவரர் திருக்கோலம், 25ம்தேதி ரிஷப வாகனம் - பார்வதி திருக்கோலம், 26ம் தேதி மயில் வாகனம் - பாலசுப்பிரமணியர் திருக்கோலம், 27ம் தேதி காமதேனு வாகனம் - நவநீத கிருஷ்ணர் திருக்கோலம், 28ம் தேதி சிம்ம வாகனம் - மகிஷாசூரமர்த்தினி திருக்கோலம், 29ம்தேதி பூஞ்சப்பரத்தில் - ஆனந்த நடராஜர் திருக்கோலம், 30ம்தேதி கமல வாகனம் - கஜலெட்சுமி திருக்கோலம், 1ம் தேதி அன்ன வாகனம் - கலைமகள் திருக்கோலம் என நாள்தோறும் இரவு 10 மணிக்கு திருவீதியுலா நடக்கிறது.

6ம் திருவிழா முதல் 10ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு வேடங்கள் அணிந்து மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழா வரும் அக்டோபர் 2ம்தேதி காலை 6மணி, காலை 7.30மணி, காலை 9மணி, காலை 10.30மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து நள்ளிரவு 12மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.