Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து சோகம் யானை தாக்கி 2 விவசாயிகள் பலி: சடலங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து யானை தாக்கியதில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை நாரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேணுகோபால்(50). ஊரையொட்டி உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில், நெல் பயிரிட்டுள்ளார். யானைகளால் பயிர்கள் சேதமாகி விடக்கூடாது என்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, நிலத்திற்கு காவலுக்கு சென்றார்.

சிறிது நேரம் கழித்து, அவரது தந்தை முனுசாமி நிலத்திற்கு சென்றபோது, அப்பகுதியில் ஒற்றை யானை வேணுகோபாலை ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஊருக்குள் ஓடி சென்று கூறினார். இதையடுத்து, கிராம மக்கள் தீப்பந்தம் உள்ளிட்டவைகளுடன் விவசாய நிலத்திற்கு விரைந்து சென்ற போது, அங்கு படுகாயங்களுடன் வேணுகோபால் சடலமாக கிடந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை சுமார் 7 மணியளவில், வேணுகோபாலின் உடலுடன் கிருஷ்ணகிரி- மகாராஜகடை நாரலப்பள்ளி கூட்ரோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வேணுகோபாலின் 2 மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், யானைகளை கர்நாடக வனத்திற்கு விரட்ட வேண்டும், 50 வனத்துறையினர் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், வேணுகோபாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, லக்கசந்திரம், மாரசந்திரம், தாவரகரை, அயன்பூரிதொட்டி, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை, நெல் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. தாவரக்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (65) என்பவர், நேற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

நேற்று மாலை வனப்பகுதிக்குள் சென்ற ஒரு ஆட்டை தேடிச் சென்றார். அப்போது, அங்கிருந்த ஒற்றை யானை, அவரை விரட்டி தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணப்பா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், கொத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் கிருஷ்ணப்பா சடலத்துடன் மறியல் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த தேன்கனிக் கோட்டை வனத்துறையினர், அந்த யானையை விரட்டியடித்தனர். பின்னர், தேன்கனிக்கோட்டை போலீசார் கிருஷ்ணப்பாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.