சென்னை: நாளை கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடப்படுவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. விசேஷ, முகூர்த்த நாட்கள் இல்லாததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை முதல் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.
அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.500ல் இருந்து ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.400ல் இருந்து ரூ.800க்கும், முல்லை ரூ.300ல் இருந்து ரூ.750க்கும், ஜாதிமல்லி ரூ.200ல் இருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.800க்கும், சாமந்தி ரூ.120ல் இருந்து ரூ.200க்கும், சம்பங்கி ரூ.100ல் இருந்து ரூ.150க்கும், அரளி பூ ரூ.100ல் இருந்து ரூ.300க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80ல் இருந்து ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் இதுகுறித்து கூறுகையில்,‘இன்னும் 3 நாட்களுக்கு பூக்களின் இதே விலை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் 5ம் வாரம் என்பதால் அம்மன் கோயில்களில் விசேஷமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் கூட பூக்களின் விலை உயரும்,’ என்றார்.