Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேடு சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம்; ஐஏஎஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு: மேல் முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 6.5 சென்ட் நிலத்தை உரிய காரணத்திற்கு பயன்படுத்தாததால் அதை திருப்பித் தரக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என, நில உரிமையாளர்கள் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, இரண்டு மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு 25,000 ரூபாயை மூன்று வாரங்களில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.