அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் 18வது நம்பர் கேட்டு அருகே அங்காடி நிர்வாகம் சார்பில், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பாதாள சாக்கடையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது திடீரென்று கழிவுநீர் செல்லாமல் தடைப்பட்டு நின்றுள்ளது. இதையடுத்து அந்த அடைப்பு அகற்ற ஊழியர்கள் இறங்கியபோது உள்ளே மனித எலும்பு கூடு கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து சென்றனர்.
இதுபற்றி அங்காடி நிர்வாக அதிகாரி செல்வநாயகம் என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு
போலீசார் வந்து பாதாள சாக்கடையில் கிடைந்த மனித எலும்பு கூட்டை எடுத்தனர். அது ஆணின் எலும்பு கூடா, பெண்ணின் எலும்பு கூடா என்று ஆய்வு செய்வதற்கு மயிலாப்பூரில் உள்ள லேபுக்கு அனுப்பி உள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு எப்படி வந்தது? யாராவது கொலை செய்து பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றார்களா, அந்த உடல் அழுகி எலும்பு கூடாக மாறிவிட்டதா என்று விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’பாதாள சாக்கடையில் எடுக்கப்பட்ட மனித எலும்பு கூட்டால் யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றனர்.வியாபாரிகள் கூறுகையில், ‘’சமீப காலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பைக் திருட்டு, செல்போன் திருட்டு, வழிப்பறி, ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு பழ மார்க்கெட் 18ம் நம்பர் கேட் பகுதியில் பாதாள சாக்கடையில் மனித எலும்பு கூடு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரிக்கவேண்டும்’ என்றனர்.

