கோவூரில் சுற்றித்திரிந்த மாடுகளால் விபத்து; உரிமையாளர்களுக்கு அபராதம்: காஞ்சி மாவட்ட நிர்வாகம் அதிரடி
குன்றத்தூர்: குன்றத்தூரில் இருந்து போரூர் செல்ல கோவூர் சாலை பிரதான சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த வாகனங்கள் சாலையில் பயணிக்கின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சமீபகாலமாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து பகுதி மக்கள், காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நேற்று இரவு கோவூர் பிரதான சாலையில் சுற்றித்திரிந்த 17 மாடுகளை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர், மாடுகளை முறையாக வாகனங்களில் ஏற்றி, வாலாஜாபாத்தில் உள்ள கோசாலைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிடிபட்ட மாடுகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.2500 அபராதம் விதித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ.2500 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்ட பிறகு மாடுகளை பெற்றுக்கொள்ளலாம். மீண்டும் இதேநிலை தொடர்ந்தால் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதேபோன்று கோவூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பிரதான சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் இனிவரும் நாட்களில் மாடுகளால் ஏற்படும் வாகன விபத்து தடுக்கப்படும், வாகன ஓட்டிகளும் பயமின்றி பாதுகாப்பாக பயணிக்க முடியும் என பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.


