Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சீமை கருவேல முள் செடிகள்

*நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை : கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள சீமை கருவேல முள் செடிகளை அகற்ற கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலது கரை சாலையில் வடரங்கம், பனங்காட்டங்குடி,சரஸ்வதிவிளாகம் ,சந்தபடுகை,அளக்குடி, மகேந்திரப்பள்ளி ஆகிய இடங்களில் சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல முள் செடிகள் நீண்டு வளர்ந்து சாலையை அடைத்துக் கொண்டு இருந்து வருகின்றன. இதனால் சாலை பெரிதும் மூடப்பட்டுள்ளது.

சாலையின் பெரும்பகுதி சீமை கருவேல முள் செடிகளால் சூழப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர கிராம மக்கள் சாலையில் செல்லும்போது மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்லும் விவசாயிகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சாலை அடைத்துக் கொண்டிருக்கின்ற முள் செடிகள் உடலில் பட்டு ஆடைகள் கிழிகின்றன.

முள் செடிகள் உடலில் படுவதால் உடல் காயம் ஏற்படுகிறது.மேலும் கண்களில் பட்டால் கண்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கால்நடையாக இரவு நேரங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சீமை கருவேல முள்செடிகள் சாலையை அடைத்துக் கொண்டு இருப்பதால் சாலையோரம் உள்ள அடர்ந்த புதர் போன்ற பகுதியிலிருந்து விஷ பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் சாலையில் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கால்நடையாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே ஆற்றின் கரையோர கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்டு வளர்ந்து சாலையை மறைத்துக் கொண்டிருக்கின்ற சீமை கருவேல முள்செடிகளை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்றின் கரையோர கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.