*அருவிகளில் குளித்து மகிழ்ச்சி
சேந்தமங்கலம் : கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டைய மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சீதோசன நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஜில் என குளிர்ந்த காற்று வீசி வருகிறது. காலை வேளையில் மேகமூட்டத்துடன் சாரல் கட்டி வருகிறது. மலைப்பாதையில் மேகமூட்டங்கள் கடந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 60 கொண்டை ஊசி வளைவுகளுக்கு மேல் கடுமையான மேகமூட்டம் இருந்து வருகிறது.
விடுமுறை தினமான நேற்று சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். மேலும், அமாவாசையை முன்னிட்டு கரூர், திண்டுக்கல், ஈரோடு பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.
ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.பின்னர், தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சி முனையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மாலை வீடு திரும்பும்போது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதியில் உள்ள சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், கமலா ஆரஞ்சு, பலா உள்ளிட்டவற்றை
வாங்கிச் சென்றனர்.