ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர். குற்றவாளிகள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. விசாரணையின்போது மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.