கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில், கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால், மலைப்பகுதியில் உள்ள அருவிகள், நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவும் நகரில் சாரல் மழை பெய்தது. இந்த மழைக்கு கொடைக்கானல் பெருமாள்மலை-பெரியகுளம் மலைச்சாலையில் அடுக்கம் பகுதியில் 3 இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் கிடக்கும் பாறைகளையும், மண்ணையும் துரிதமாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.