நியூயார்க்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெஸ்ஸி ஐசன்பெர்க், தனது சிறுநீரகங்களில் ஒன்றை முன்பின் தெரியாத ஒருவருக்கு தானம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் ஆஸ்கர் நடிகரான ஜெஸ்ஸி ஐசன்பெர்க், நீண்ட காலமாக ரத்த தானம் செய்து வருபவர் ஆவார். இந்நிலையில், தனது புதிய திரைப்படமான ‘நவ் யூ ஸீ மீ: நவ் யூ டோன்ட்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவர் அளித்த பேட்டி ஆச்சரியமடைய செய்துள்ளது. அவர் கூறுகையில், ‘சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே எனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்ய திட்டமிட்டிருந்தேன்.
அப்போது அது கைகூடவில்லை. சமீபத்தில், எனது மருத்துவர் நண்பர் ஒருவரின் உதவியுடன், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லேங்கோன் மருத்துவமனையை அணுகி, சிறுநீரக தானத்திற்கான பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ேடன். ரத்த தானம் செய்வதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம், அடுத்த கட்டத்திற்கு செல்லத் தூண்டியது. அமெரிக்காவில் உறுப்பு தானம் செய்வோரின் பற்றாக்குறை மிக அதிகமாக இருப்பதை அறிந்த பிறகு, இந்த முடிவை எடுத்தேன். இதைச் செய்வது ஆபத்தில்லாதது, மிகவும் தேவையானது. இந்த தானத்தைச் செய்ய மிகவும் ஆவலாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்பின் தெரியாதவருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை வழங்கிய அவருக்கு வரும் டிசம்பர் மாதம் சிறுநீரக தான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
 
  
  
  
   
