டெல்லி: கேரளாவில் 2 பல்கலை.களில் துணை வேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கேரள டிஜிட்டல் அறிவியல் பல்கலையின் துணைவேந்தராக சிசா தாமஸையும், ஏ.பி.ஜே., அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தராக கே. சிவபிரசாதையும் நியமனம் செய்து கடந்த ஆண்டு நவம்பரில் ஆளுநராக இருந்த ஆரிப் முஹமது கான் ஆணையிட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கேரளாவில் 2 பல்கலை.களில் துணை வேந்தர்களை நியமிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்சு துலியா தலைமையில் 2 வாரத்தில் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விளம்பரங்களை வெளியிட்டு 4 வாரத்தில் விண்ணப்பங்கள் பெற்று 3 மாதத்தில் நியமனங்களை முடிக்கவும் ஆணையிட்டுள்ளது. ஆளுநர்களின் தலையீட்டால் பல மாநிலங்களில் பல்கலை. துணை வேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதால், துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான பட்டியலை தயார் செய்ய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சுதான்சு தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.