பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், வாரத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாட்டு சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த மாதம் துவக்கத்தில் மழை சற்று குறைவால், மாடு விற்பனை ஓரளவு இருந்தது.
அச்சமயத்தில் மாடு வரத்து அதிகமாக இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், அனைத்து ரக மாடுகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரே நாளில் ரூ.1.80 கோடி முதல் ரூ.2 கோடி வரை வர்த்தகம் இருந்தது. ஆனால் கடந்த சில வாரமாக கேரளாவில் மழையால், அம்மாநிலத்தில் மாடு விற்பனை மந்தமானதால், அங்குள்ள வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்தது. இதனால் பொள்ளாச்சியில் மாடு விற்பனை மந்தமானது.
அதுபோல நேற்று நடைபெற்ற சந்தைநாளின்போது, ஆந்திரா மாடுகள் வரத்து குறைந்து, உள்ளூர் பகுதி மாடுகள் வரத்தே விற்பனைக்காக ஓரளவு கொண்டு வரப்பட்டன. ஆனால், இன்னும் தொடர் மழை தாக்கம் இருப்பதால், வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து இதனால் மாடுகள் விற்பனை மந்தமானது.
இதனால், குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. காளை மாடு ரூ.55 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.40 ஆயிரத்துககும், பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும் என இரண்டு வாரத்துக்கு முன்பு விட ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், வர்த்தகம் மிகவும் சரிந்து, ரூ.1 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.