திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே 8ம் வகுப்பு படிக்கும் 14 வயதான சொந்த மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஹோஸ்துர்க் கிராமம். இது கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 14 வயதான ஒரு மகள் உண்டு.
இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். இதில் மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் உடனே ஹோஸ்துர்க் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது தந்தை தான் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி கூறினார்.
அதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து அறிந்ததும் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த மாணவியின் தந்தையை அந்த பகுதியினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும், பாஸ்போர்ட் எடுப்பதற்காகவே வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே சிறுமியை பலாத்காரம் செய்தது அவர் தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதே ஹோஸ்துர்க் பகுதியில் ஒருவர் சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.