102 குழி தோண்டிய கீழடிக்கு ஆதாரம் கேட்பு 10 குழி மட்டுமே தோண்டி சரஸ்வதி நதி கண்டுபிடிப்பு: சு.வெங்கடேசன் எம்பி விமர்சனம்
மதுரை: பத்து குழிகள் மட்டும் தோண்டி சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர் என சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் 5 மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.
இதே முறையில் அரியானாவிலும், இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5,700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறையில் பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜ அரசு. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.