கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி மனைவியை இழந்த மாஜி காவலரிடம் நீதிபதி நடத்திய விசாரணை விவரம்
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏமூர் புத்தூரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரர் காளியப்பன் மனைவி அருக்காணி(60) பலியானார். அவரது வீட்டுக்கு ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், நேற்று காலை சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் விபரம்:
நீதிபதி : வேனில் போனீங்களா?
காளியப்பன்: டெம்போவில் 10 பேர் போனாங்க.
நீதிபதி: விருப்பட்டு போனாங்களா அல்லது பார்ப்பதற்காக போனாங்களா, கட்சி சார்பில் போனாங்களா?
காளியப்பன்: கட்சி கிடையாது, விஜய்யை பார்ப்பதற்காக போனாங்க.
நீதிபதி: எத்தனை மணிக்கு போனாங்க.
காளியப்பன்: மதியம் 12 மணிக்கு போனாங்க.
நீதிபதி: சாப்பாடு எடுத்துட்டு போனாங்களா?
காளியப்பன்: எடுத்துட்டு போகல, போயிட்டு வந்துடலாம் என நினைத்து போனாங்க.
நீதிபதி: குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து போனாங்களா?
காளியப்பன்: தண்ணீர் எடுத்துட்டு போகல.
நீதிபதி: எப்படி நடந்தது?
காளியப்பன்: ஒன்னுமே தெரியல, இரவு 7.30 மணிக்கு வாட்ஸ் அப்பில் இறந்து விட்டார்கள் என தகவல் வந்தது. எப்படி இறந்தார்கள், எத்தனை மணிக்கு இறந்தார்கள் என்ற தகவல் தெரியாது.
நீதிபதி: அவா்களுடன் சென்றவர்கள் ஏதாவது தகவல் தொிவித்தார்களா?
காளியப்பன்: 5,6 பிள்ளைகள் சென்றனர். அவர்களும் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனே அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். தள்ளுமுள்ளுவில் விழுந்தாக அவர்கள் தெரிவித்தனர். வெளியே சொன்னால் பாதிப்பு வருமோ, என அவர்கள் பயப்படுகின்றனர்.
நீதிபதி: மதியம் சாப்பாட்டுக்கு அவர்கள் ஏன் வரவில்லை என நீங்கள் கேட்கவில்லையா?
காளியப்பன்: போன் இருந்திருந்தால் கேட்டிருப்பேன், அவர்கள் போனை எடுத்து செல்லவில்லை. கூட ெசன்றவர்களின் செல்ேபான் எண்ணும் எனக்கு தெரியாது. நடிகர் என்ற முறையில் ஆசையில் அவரை பார்க்க சென்றார்கள். அரசியல் எதுவும் கிடையாது. இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார்.
‘விசாரணைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு’
ஒருநபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று 2வது நாளாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஏமூர்புதூர் கிராமத்தில் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கூறுகையில்,‘‘விசாரணை தற்போது துவங்கியுள்ளது. இன்னும் நிறைய விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இது விசாரணையின் ஆரம்பம் மட்டும் தான். நிறைய கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. தற்போது சென்னை செல்கிறேன். பாதிக்கப்பட்டோர், பொதுமக்கள் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர். பாதிக்கப்பட்டோர் துக்கத்தில் உள்ளனர்,’’என்றார்.