“கரூர் துயர சம்பவத்தில் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்” சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம்: பொறுப்புடன் நடந்து கொள்ள முதல்வர் வேண்டுகோள்
சென்னை: கரூரில் குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இந்த துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஆற்றிய காணொலி உரை: கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம்; இனி, நடக்ககூடாத துயரம்.
மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலேயும் துயரத்திலேயும் தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை; உடனே அன்றைக்கு இரவே கரூருக்கு போனேன்.குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்தவர்களது குடும்பத்திற்கு, தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி கொண்டு இருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவத்துக்கான முழுமையான - உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பரப்புகின்ற வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சி தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவர்கள் நம்முடைய தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது, இனிவரும் காலங்களில், எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது, நம் எல்லோருடைய கடமை. எனவே, நீதிபதியின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி - இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மனித உயிர்களே, எல்லாவற்றிற்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவர்க்கும் வேண்டியது.
அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு எல்லோரும், மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எப்போதுமே நாட்டிற்கு பல வகைகளிலே முன்னோடியாக தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலேயும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகளை பதிவிட்டவர்களை விசாரிக்க திட்டம்;
கரூரில் கடந்த சனிக்கிழமை விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தில் இதுவரை 41 வரை மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கான முழுமையான - உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பல்வேறு வதந்திகளையும், பொய் செய்திகளையும் பரப்பி வருகிறார்கள்.இந்நிலையில், கரூர் அசம்பாவிதம் சம்பந்தமாக சமூகவளைதளங்களில் கருத்துகளை பதிவிட்டவர்களின் வீடியோவை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். தேவைப்பட்டால் அவர்களையும் விசாரிக்க காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.