பாட்னா: தமிழ்நாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் ‘உன்மேஷா சர்வதேச இலக்கிய திருவிழா’வின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியானதற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிறைய இளைஞர்கள் இறந்துள்ளனர். மிகுந்த வருத்தமளிக்கிறது. பெரிய அளவில் கூட்டம் கூடும் போது மக்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். பெங்களூருவில் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நடந்த பாராட்டு விழாவிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்காது என நம்புகிறேன்’’ என்றார்.