கரூர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் த.வெ.க. நிர்வாகி மதியழகனை சிறையில் அடைக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை த.வெ.க. நிர்வாகி மதியழகனை சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதில் மதியழகன், இவருக்கு அடைக்கலம் தந்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் 29ம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் கடந்த 5ம்தேதி முதல் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. மதியழகனிடம் 2 நாள் விசாரணை நடத்த கரூர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்காக அன்று மாலையே தாந்ேதாணிமலையில் உள்ள அரசுக்கு சொந்தமான அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்றும் விசாரணை நடந்தது.
அப்போது பிரசாரத்திற்கு 60க்கும் மேற்பட்ட டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன், ஜனநாயகன் படத்தில் கரூர் காட்சிகளை இடம் பெற செய்வதற்காக இவை கொண்டு வரப்பட்டதா என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் மதியழகன், ‘’ட்ரோன்கள் ஏற்பாடு எல்லாம் தலைமை கழகம் தான். எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை’’ என தெரிவித்ததாக தெரிகிறது. இன்று காலையும் விசாரணை நீடித்தது. இந் நிலையில் 2 நாள் காவல் இன்றுடன் முடிவடைவதால் மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று பிற்பகல் கரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர்.