கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தை நாளை (டிச.05) திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என அறிவித்து அவரது சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படதயாரிப்பு நிறுவனம் ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தனர் என்றும், அந்த பணம் தற்போது வட்டியுடன் ரூ.21.78 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடவேண்டும் என்றும், அதுவரை அவர் தயாரித்துள்ள வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும் படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் எனவுஜ்ம் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கார்த்தியின் ‛வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த திரைப்படம் குறித்த தினத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படத்துக்கான அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியானது. ‛கார்த்தி 26' என்ற பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அப்போது தான் ‛வா வாத்தியார்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் தொடர்ந்து தாமதமானது. டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று கூறிய நிலையில் தற்போது இடைக்கால தடை விழுந்துள்ளது.

