கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செய்த ஏற்பாடுகள் என்ன? தமிழக அரசு அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: டிசம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும். வாகனம் நிறுத்துவதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மருத்துவ வசதிகள் வழங்க தற்காலிக முகாம்கள் அமைக்க வேண்டும். கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க கூடாது. கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோர் நவம்பர் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.


