*ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்
சேந்தமங்கலம் :புதுச்சத்திரம் அடுத்த காரைக்குறிச்சி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.
புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது.
முகாமில் காரைக்குறிச்சிபுதூர், காரைக்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு பெயர் மாற்றம், நிலம் அளவீடு செய்தல், புதிய குடிநீர் குழாய், கலைஞர் கனவு இல்லம் வீடு, விதவை உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
உடனடியாக மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வட்டார அட்மா குழு துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலட்சுமி, சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் தாசில்தார் மோகன்ராஜ், வட்டார அட்மா குழு தலைவர் கௌதம், வேளாண்மை உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி, துணை வேளாண் அலுவலர் கோவிந்தசாமி, ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.