Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரைக்குடியில் பரபரப்பு மதுரை வியாபாரியை கடத்தி 1.50 கிலோ நகைகள் கொள்ளை

காரைக்குடி : மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா(40). தங்க நகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அங்குள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக தனது பையில் சுமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1.50 கிலோ பழைய தங்க நகைகளை வைத்திருந்தார். அப்போது, மர்மநபர்கள் காரில் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென விஜயராஜாவை இழுத்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

பின்னர், அவரிடம் இருந்த நகைப்பையை பறித்துக் கொண்டனர். தொடர்ந்து காரைக்குடியில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள திருமயத்தில் அவரை இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இதையடுத்து விஜயராஜா அங்கிருந்து பஸ்சில் காரைக்குடி வந்தடைந்தார். பின்னர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஷ் புனியா, தேவகோட்டை டிஎஸ்பி கவுதம், சிவகங்கை ஏடிஎஸ்பி பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதி சாலைகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.