*விரைவாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர் : கபிஸ்தலம் பகுதியில் அறுவடை செய்த நெல்லை சாலையில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி, கபிஸ்தலம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் இன்னும் முடியவில்லை.
நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தாலும், லாரி, தார்ப்பாய், சாக்குகள் சரிவர கிடைக்காத காரணத்தினாலும் இந்த பகுதியில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர்.
இது குறித்து விவசாயி கூறுகையில்; நெல் தாமதமாக கொள்முதல் செய்யப்பட்டு சமீபத்தில் பெய்த மழையில் அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து நெல் மணிகள் முளைத்து நஷ்டம் அதிகமாகவிட்டது.
அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் லாரிகள், தார்ப்பாய் தட்டுப்பாடு உள்ளது. உரிய முறையில் மேற்கூரை அமைக்காத காரணத்தால் நெல் மூட்டைகள் நனைந்து அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் 20 முதல் 25 சதவீதம் அறுவடை மீதம் உள்ளது. அடுத்த வாரத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே விளைவித்த நெல்லை காப்பாற்ற உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விளைவித்த நெல்லை மழையில் இருந்து காப்பாற்றுவது சிரமமாக உள்ளது. எனவே நெல்மணிகளை உடனடியாக அரவைக்கு எடுத்துச் சென்று உடனுக்குடன் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை காக்க வைக்க கூடாது.
போதுமான லாரிகள் அனுப்பி நெல்லை உடனுக்குடன் எடுத்து சென்றால் நெல் முளைப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வரும் நாட்களிலாவது நெல்மணிகள் சேதம் அடையாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

