Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு தடை: காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது வழிபாட்டுத் தலங்கள், ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் மற்றும் அதி சக்தி வாய்ந்த ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறையை சார்ந்தவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வழிகாட்டு நடைமுறைகள் கலெக்டரால் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

* வாகனங்கள் ஏர் ஹார்ன் அல்லது மல்டி-டோன் ஹாரனைப் பொருத்தவோ பயன்படுத்தவோ கூடாது. இதனை வட்டார போக்குவரத்து அலுவலர் உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற சத்தத்தை உருவாக்கும் அல்லது இயக்கத்தில் இருக்கும் போது ஆபத்தான ஒலி ஏற்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

* வட்டார போக்குவரத்து அலுவலர், சத்தம் மற்றும் ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இரைச்சல் அளவு சுற்றுப்புற காற்றின் தரத்தை மீறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மீறினால் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* வட்டார போக்குவரத்து அலுவலர், சாலையில், குறிப்பாக அமைதி மண்டலத்தில் ‘‘அமைதி மண்டலம் - ஹார்ன் இல்லை” என்பதைக் குறிக்கும் பலகைகளை அமைக்க வேண்டும்.

* ஒலிபெருக்கி அல்லது வேறு எந்த ஒலி மூலமும் பயன்படுத்தப்படும் பொது இடத்தின் எல்லையில் இரைச்சல் அளவு அப்பகுதிக்கான சுற்றுப்புற இரைச்சல் தரத்தை விட 10 dB(A) ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அல்லது 75 dB(A) எது குறைவாக இருந்தாலும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி அமைதிப் பகுதி/மண்டலத்தில் ஒலிபெருக்கிகள் அல்லது பிற ஒலி உருவாக்கும் கருவிகளைப் பயன்படுத்தும் நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி சத்தம் தொல்லை தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு காவல்துறை தீர்வு காண வேண்டும். ஒலி உமிழும் கட்டுமானக் கருவிகளை இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளிலும் அமைதிப் பகுதியிலும் பயன்படுத்தவோ அல்லது இயக்கவோ கூடாது என்பதை உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.

* ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துபவர்கள் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் சமர்ப்பிக்கும் விவரங்களில் பேச்சாளர்களின் வகை, ஸ்பீக்கர்களின் எண்ணிக்கை, பயன்படுத்தும் காலம் போன்றவை இருக்க வேண்டும், வழங்கப்பட்ட ஆவணங்களுக்கு எதிராக ஏதேனும் மீறல் காணப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி தனிநபர் / அமைப்பு மீது காவல்துறை தேவையான கடுமையான நடவடிக்கையைத் தொடங்கும்.

* இரவு நேரத்திலும், அமைதியான பகுதிகளிலும், பொதுமக்கள் ஒலிபெருக்கி அல்லது ஒலி உருவாக்கும் கருவி அல்லது இசைக்கருவி அல்லது ஒலி பெருக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) தொழிற்சாலைகளின் செயல்பாடுகளில் இருந்து உருவாகும் இரைச்சல், ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுப்புற காற்றின் தரத் தரத்தை மீறாமல் இருப்பதை உறுதி செய்யும்.இவ்வாறு கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.

* அனுமதி பெற வேண்டும்

டெசிபல் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து, ஒலி மாசு தர அளவை கணக்கிட்டு அதன் மூலம் பொதுமக்கள் ஒலி மாசு அதிகம் உள்ள இடங்களை குறிப்பிட்டு காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கூட்டத்தில், பொது வழிபாட்டுத் தலங்கள், ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் திருவிழாக்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தும் முன்னர் காவல் துறை அதிகாரியிடம் எவ்வளவு நாட்கள் மற்றும் எவ்வளது தூரம் ஒலி பெருக்கிகள் அமைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டு முன் அனுமதி பெற்ற பின்னரே ஒலி பெருக்கிகள் அமைக்க வேண்டும். மீறும் பட்சத்தில் ஒலி பெருக்கிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.