Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன்கொடுமை வழக்கை முறையாக கையாளாததால் அதிரடி நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: வன்கொடுமை வழக்கை முறையாக கையாளாததால் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிபதி செம்மல் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் பகுதியில் சிவக் குமார் என்பவர் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முருகன் - பார்வதி தம்பதியர் ஸ்வீட் வாங்க வந்துள்ளனர். அப்போது, 2 தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு முருகன் ஸ்வீட் ஸ்டால் மீது கல்வீசி தாக்கியுள்ளார். இது சம்பந்தமாக 2 தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முருகன் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் சிவக்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கில் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளரான சிவக்குமாரின் மருமகன் லோகேஷ் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். அவரை வழக்கில் சேர்க்கச் சொல்லி முருகன் தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் இது சம்பந்தமாக முறையான விசாரணை நடைபெறாததால் முருகன் தரப்பு காஞ்சிபுரம் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இது சம்பந்தமாக 15 நாட்களில் முறையாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் முறையான அறிக்கை கொடுக்காததால் நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி ஆஜராகும்படி காஞ்சிபுரம் நீதிமன்றத்தால் போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று இந்த வழக்கில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் ஆஜரானார்.

இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்.22ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி செம்மல் அதிரடியாக உத்தரவிட்டார். நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்ட பின்னர், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் சங்கர், டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிமன்றத்தில் இருந்து அவசர அவசரமாக இழுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதை தொடர்ந்து டிஎஸ்பி சங்கர் கணேஷை போலீஸ் வாகனத்தில் கிளைச் சிறைக்கு ஏற்றிச் செல்ல போலீசார் ஒத்துழைக்க மறுத்ததால் நீதிபதி தன்னுடைய காரில் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்.

அப்போது நீதிபதியின் காரில் ஏற்றியபோதும் போலீசார் நீதிமன்ற பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்றத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீஸ் தரப்பில் ஜாமீன் கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அவசர வழக்காக இரவு அல்லது நாளை காலை விசாரிக்கப்படுகிறது.

* தப்பியதாக சர்ச்சை

நீதிமன்றத்தில் இருந்து மருத்துவமனைக்கு சென்ற டிஎஸ்பி சங்கர் கணேஷ் அங்கிருந்து தப்பியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனியாக சென்று பேசி விட்டு வரவே டிஎஸ்பி சென்றார் என்று போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்கை சரிவர கையாளாத காரணத்துக்காக சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியிலும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.