சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என செல்வராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் பிற ஜாதிகளை சேர்ந்த மூவரின் தூண்டுதலின் பேரில் பூஜைகளில் பட்டியலின மக்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை எனவும், தேரோட்டத்தின் போது பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் வரவிடாமல் தடுக்கின்றனர் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், செல்வராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பட்டியலின மக்கள் செல்ல தடையில்லை என உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு அறிக்கையின்படி வெள்ளோட்டம், தேரோட்டம் ஆகியவற்றை நடத்தவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகுபாடு காட்டப்படவில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

