Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கமுதி அருகே மற்றொரு கீழடி; மண்ணில் புதைந்து கிடக்கும் பழங்கால பொருட்கள்: அகழாய்வு நடத்த கோரிக்கை

கமுதி: கீழடி அகழாய்வில் கிடைத்தது போல கமுதி அருகே பழங்கால பொருட்கள், வடிகால் அமைப்பு தென்பட்டுள்ளதால் இப்பகுதியில் அழாய்வு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பல்வேறு தேவைகளுக்காக நிலத்தை தோண்டும்போது பழங்கால பொருட்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, பேரையூர், மருதங்கநல்லூர், ஆனையூர், செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால குடுவைகள், பானை ஓடுகள், செங்கற்கள் கிடைத்துள்ளன. மேலும், பழங்கால கட்டுமான அமைப்புகளும் காணப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இவை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஒத்துள்ளன.

இது குறித்து பேரையூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் முனியசாமி கூறியதாவது: கமுதி அருகே குண்டாறு படுகையில் அண்மையில் தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து அரிய நந்தி சிலை கிடைத்தது. மருதங்கநல்லூரில் 10ம் நூற்றாண்டு (முற்கால பாண்டியர்) காலத்து சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி பார்வதி சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆனையூர், செங்கமேடு பகுதிகளில் சாலை பணியின்போது, கீழடி அகழாய்வில் கிடைத்தது போல சீன பானை ஓடுகள், கருஞ்சிவப்பு பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், சிறு கிண்ணங்கள், பழங்கால செங்கல் ஆகியவை கிடைத்துள்ளது. ஆனையூர் பகுதியில் கீழடியில் காணப்படுவது போல வடிகால் அமைப்பும் உள்ளது. இப்பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு செய்தால் கீழடியில் கிடைக்கப்பெற்றது போல, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த அரிய தகவல்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.