கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் தனியார் வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் தனியார் வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், குன்னத்தூர் கிராமத்தில் இன்று (01.12.2025) காலை சுமார் 6.00 மணியளவில் சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றும், கீழார்கொள்ளை கிராமத்திலிருந்து ஆலந்தூரிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் வேனில் பயணம் செய்த திருமதி. உமா (வயது 40) க/பெ.மூர்த்தி மற்றும் திருமதி.பானு (வயது 24) க/பெ.சரவணன் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, பூஞ்சேரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

