சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை, பாமக வழக்கறிஞர் கே.பாலு, தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ.பார்த்தசாரதி, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.ஸ்ரீதரன், பா.ஜ.க வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில், சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இறுதி விசாரணைக்காக வழக்கை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.